Recents in Beach

வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?

முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம். சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும்.

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும் கூட தானே செய்து கொள்ளக் கூடாது. இனி வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முகத்தினை நரம்புகள் தெரியாமல் மசாஜ் செய்யக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி விட்டு சில வகை பேக்குகளை மட்டுமே போடலாம்.

- உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் வாசலீன் அல்லது கிளிசரின் தடவவும், பால், ஓட்ஸ், பாதம் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

- சாதாரண சருமம் உள்ளவர்கள் ஒரு பிடி புதினா, இரண்டு வேப்பிலை, இரண்டு துளசி இலைகளை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறிய பின் முகத்தைக் கழுவலாம்.

- எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு, ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

- முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயிறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் பேக் போல் வாரம் ஒரு முறை போட்டு சில நிமிடங்கள் ஊறி பிறகு கழுவ வேண்டும்.

- ரசாயன வகை கிரீம்களையும் மற்ற அழகு சாதனங்களையும் உபயோகிக்கும் போது முகம் உடனடியாக பளபளப்பாகி பலன் அளிப்பது போல் தோன்றினாலும், நாளாவட்டத்தில் முகத்தின் பொலிவு மறைந்து விடும். அதுவே மூலிகைகளை உபயோகித்து வந்தால் பலன் தெரிய சில காலம் ஆனாலும் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.