Recents in Beach

வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள் போன்றவற்றிற்கான சில எளிய தீர்வுகள்!



ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாவிட்டால், அதனாலேயே நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை உண்டவுடன் வாயை கொப்பளிக்கவும் வேண்டும். மேலும் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க ஒருசில இயற்கை பொருட்களால் வாயைப் பராமரிக்க வேண்டும்.


இயற்கைப் பொருட்கள் கொண்டு வாயைப் பராமரித்தால், வாயில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யலாம். குறிப்பாக பல் கூச்சம், மஞ்சள் நிற பற்கள், வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தக்கசிவு, பல் சொத்தை போன்ற பல பொதுவான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில செயல்களைப் பின்பற்ற வேண்டும்.

பேக்கிங் சோடா - பல் கூச்சம்

உங்களுக்கு அடிக்கடி பல் கூச்சம் ஏற்படுகிறதா? வாயில் pH அளவு குறைவாக இருப்பதன் காரணமாக பற்களின் எனாமல் தேய்ந்து, பல் திசுக்கள் வெளிப்படுவதால் பல் கூச்சம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் - ஈறுகளில் இரத்த கசிவு

ஆயுர்வேதத்தின் படி, நீரிழிவு, ஆஸ்துமா, ஈறுகளில் இரத்தக்கசிவு, மஞ்சள் பற்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் உதவுவதாக சொல்லப்படுகிறது. அதற்கு தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 4-5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வேப்பிலை - ஈறு நோய்கள்

வேப்பிலையில் ஆன்டி-மைக்ரோபியல், பூஞ்சை எதிர்ப்புப் பொருள் போன்றவை ஏராளமாக உள்ளது. அதனால் தான் நம் முன்னோர் அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். இக்காலத்தில் மரங்களைக் காண்பதே அரிதாக உள்ளது. அதிலும் வேப்ப மரம் கிடைத்தால், வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்குங்கள் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.

படிகாரம் - வாய் துர்நாற்றம்

பலருக்கும் வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும். இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் நல்ல தீர்வு காண, ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில் 1/4 டீஸ்பூன் படிகாரத்தை சேர்த்து வடிகட்டி, அதைக் கொண்டு வாயைக் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். எப்படியெனில் படிகாரமானது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்கள் மற்றும் அமிலங்களைத் தடுக்கும்.

வெந்தயக்கீரை - வாய் புண்

ஒரு கப் நீரில் சிறிது வெந்தயக்கீரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, அந்நீரால் வாயை தினமும் கொப்பளித்து வர, வெந்தயக்கீரையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, வாய்ப் புண்ணை சரிசெய்வதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

உப்பு தண்ணீர் - தொண்டைப் புண்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, தினமும் காலையில் வாயைக் கொப்பளித்து வர, வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, வெளியேற்றப்பட்டு, தொண்டைப்புண் குணமாகும்.