Recents in Beach

"பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம் "-எச்சரிக்கை


"பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம் "-எச்சரிக்கை

35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி,கழுத்துவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும்
எலும்பு தேய்மானம் அடைவதால்தான் மூட்டுவலி ஏற்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் எலும்பு தேய்மான (ஆஸ்ட்ரியோ போரசிஸ்) நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் 30 கோடி பேரை இந்த நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று.

 எதனால் எலும்பு தேய்மானப் பிரச்சனை வருகிறது?

உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும்போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.கால்சிய குறைபாடுதான்! கூடவே தவறான உணவுப்பழக்க வழக்கமும்! அத்துடன், மது, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக முட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரும்.

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிஸ்டன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.

எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.

எலும்புகள் வலுப்பெற:

சிறு வயதில் இருந்தே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம் குடிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகை முழு தானியத்தை தினமும் ஒருவேளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். ராகி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, முருங்கைக் காய் மற்றும் முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கீரை வகைகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இவை எலும்பு வலுவடைய உதவும்